Thursday, February 9, 2012

கண்ணதாசனின் வாழ்க்கைக் குறிப்பு

வாழ்க்கைக் குறிப்பு

நன்றி  விக்கிபீடியா
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் கம்பனியில் பணியில் சேர்ந்தார்.
கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா. இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment