Tuesday, October 31, 2017

கைகண்ட அனுபவ மருத்துவம்!


கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-
கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."
சில எளிய மருத்துவம்: !!!
வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.
நாட்டுப்புற மருந்துகள்
நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.
மகளிர் மருத்துவம்
********************
திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
ஆடவர் மருத்துவம்
*********************
ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :
1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.
குழந்தையர் மருத்துவம்
**************************
அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
பொது மருத்துவம்
*******************
ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :
1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.
கால்நடை மருத்துவம்
***********************
கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.
1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்
பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.

Monday, October 30, 2017

க‌விய‌ர‌சு கண்ணதாசன் ..!!



நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டியாரு..!
பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு
வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு
கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்
செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு
ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா
தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.
எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க
குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!
ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்
ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்
சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்
பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்
எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்
கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்
கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு
மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்
தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்
தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா
வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்
அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது
கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்
கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு
மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்
பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே
தம்பிமக சமைஞ்சா
சபையெல்லாம் வாசம் வரும்
அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்
உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்
கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்
வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி
கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!
அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே
அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே
உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே
இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து
முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி
விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி
குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி
அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு
சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு
வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே
வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா
எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி
தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா
கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா
மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்
பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி
ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்
பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு
ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி
பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி
கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி
எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு
கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா
இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா
ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு
ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்
பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய
சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்
பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே
நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா
ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா
எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி
பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து
பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி
வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா
கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை
பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா
தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி
காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி
ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு
மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா
நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டியாரு..!
- க‌விய‌ர‌சு கண்ணதாசன் 

எங்கள் ஆயா ...!!


எங்கள் ஆயா ...
ஆத்தா அப்பச்சி அப்பத்தா ஆயா
அயித்த அம்மான் ஐயா என
நகரத்தார் உறவுகள் 
எத்தனையோ இங்கிருக்க
அனைத்து உறவுகளையும்
அனுசரிக்கும் ஆயாவை
கவிஎழுதி வருணிக்கும்
சிறுமுயற்சி இதுவென்பேன்...

கருவிலே நான்தூங்கி
காலம் கழிக்கையிலே
கண்ணும் கருத்துமாய்
கருவளர காத்தவளே
ஆத்தா என்னை பொறந்தள்ள
ஆதரவாய் இருந்தவளே
அங்கமெல்லாம் நொந்தவள
அருகிருந்து பார்த்தவளே
பச்சஉடம்புக்காரி உன்மகளுக்கு
பத்தியமா சமைச்சவளே
பச்சபுள்ள நான்தேறிவர
பக்குவங்கள் சொன்னவளே
பசிக்குநான் அழுகையில
பக்குவமா பால்கொடுக்க
ஆத்தாளுக்கு பழகிகொடுத்த
அன்பான ஆயாளே
பால்குடிச்சும் நான் அழுதா
பூச்சி கடிச்சோ, வயிறு வலிச்சோ
மப்பு தட்டுச்சோ, மடிதான் தேடுச்சோ
என்றெல்லாம் பதரிடுவா அன்பான என்னாத்தா
பதராதே என்மகளே
பட்டியலும் போடாதே
இதுஇதுக்கு இப்படித்தான்அழுகுமுன்னு
இலக்கணங்கள் சொன்னவளே
ஆசையாகபெத்தாலும் ஆஸ்த்தியாகபெத்தாலும்
மல மலன்னு பெத்தாலும்
மலைப்பேதும் இல்லாம
மனதாரப் பார்பவளே
ஊருக்கு தட்டுவைத்து
உள்வீட்டில் அழைத்துவந்து
சங்கிலிகாப்போடு தண்டையுமிட்டுச்
பிஞ்சுவிரலில் மோதிரமும்போட்டு
முத்தமிட்டு மகள் கையில்
கொடுத்து மகிழிகின்ற
குணம்படைத்த ஆயாளே
அம்மான் பிள்ளைகளோ
அழுதுகொண்டே கீழிருக்க
என்னை மட்டும் மடிமீது
எபொழுதும் வைச்சவளே
பொன்னே மணியே
புதுவைர ரத்தினமே
காணகிடைக்காத
கனகமனி பூச்சரமே
என்றுதினம் தாலாட்டி
என்னையே துங்கவைப்ப
என்னலமே பெரிதென்று
தன்னலத்தை கருதமாட்ட
கோடைக்கால விடுமுறைய
என்னாளும் மறந்தததில்ல
ஆயாவீடு செல்லாம
விடுமுறையும் கழிந்ததில்ல
பரமபதம் பல்லாங்குழி
பலமுறைதான் ஆடினாலும்
பேரன்பேத்தி புன்முகத்தை
பாத்துபாத்து தோத்துபோவ
கந்தரப்பம் பணியாரம்
நெய்முருக்கு அதிரசம்
வகைவகையா பலகாரம்
வேளைக்கொன்னு தந்திடுவ
அய்யாவின் அருமைபெருமைகளை
மறக்காம சொல்லிடுவ
ஆன்மீக அறநெறிகளை
கதை கதையா சொல்லிடுவ
விடுமுறைய விட்டுட்டு
வீடுவரத் மறுத்திடுவோம்
ஏக்கத்த உள்ள வைச்சு
ஆத்தா வீட்டுக்கு அனுப்பிவைப்ப
உடன் அனுப்பும் மனகோலம்
முனைமுறியா முறுக்கு
தேங்குழல் சீடைவகை
என்றைக்கும் நாவினிக்கும்
சித்தாடைகட்டும் சிறுவயது முதற்கொண்டே
பூப்படைவதற்கும் மணவரைக்கும்
சீர்கொடுக்கும் ஆயாளை
செட்டிநாட்டின் சிகரத்தில் வைத்திடுவோம்
மொறை எதுவும் வாங்காம
சடங்கு எதுவும் செய்யாம
முழுநேர ஆயாவாய்
முத்தலைமுறைக்கு உழைப்பவளே
அனுபவமே படிப்பாக
மகப்பேறு மருத்துவராய்
குழந்தை மருத்துவராய்
பேரப்பிள்ளை வளர்ப்பவராய்
வகைவகையாய் சமைப்பவராய்
ஓய்வின்றி உழைப்பவராய்
மொத்ததில் நீ
Speed 1 Tera Hertz
Memory 1Gira Byte
எந்திரனுக்கும் மேலாவாய்
வள்ளலாய் ஆயாவை
வாழ்விலே பார்கிறேன் .
- சிட்டாள்.

Monday, May 8, 2017

செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு

Image may contain: jewelry


செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு 

நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே . 
முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்

அரும்புதடை - மோதிரம்

சங்கிலி

குருமாத்து - கைசங்கிலி

கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )

தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்

கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்

நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்

நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.

கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.

கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .

மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .

நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .

கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . ( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )

முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .

வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . ( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )

வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்

பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்

முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .

அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .

மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்

இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்

ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்

மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்

முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்

ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்

இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )

முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )

இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் .ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது .

- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Tuesday, April 18, 2017

செட்டிநாடு தாலாட்டு ...

செட்டிநாடு தாலாட்டு ...
வட்டகைகள் தோறும் வந்திருக்கும் நாமெல்லாம்
செட்டிக் குலத்தார்கள், திருப்பணிக்கே பிறந்தவர்கள்
பட்டினத்தார் நம்முடைய பாட்டையா: அவரிட்ட
தொட்டிலிலே துரைமகனைத் தொடர்ந்தாட்ட வந்துள்ளேன்
கடலலையே தாலாட்டும்; காவிரியும் சீராட்டும்
உடனசையும் தென்னை மடல்விரித்து சோறூட்டும்
இடையிலென் பாட்டெதற்கா? இடைமருதூர்ப் பிள்ளையவன்
கடைவிழியாற் கேட்கின்றான் கண்வளரப் பாடுகிறேன்
என்னூரார் முன்னோராம் இராமநாதப் பெரியாராம்
மின்வயிரப் பாட்டாம் மேலான தொட்டிலிட்டுக்
கண்மணியாம் மருதீசர் கண்வளரப் பார்த்திருந்தார்
அன்னாரின் அடிபற்றி அவரூரேன் பாடுகிறேன்
ஆறு குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றதனால்
மாறாமல் தாலாட்டை மனையில் பழகியதால்
நூறுமைல் தாண்டிவந்து நோன்பிருந்து பெற்றவனை
ஆராரோப் பாடிவிழி அயர்விக்க வந்துள்ளேன்.
பேச்சும் கவியாகப் பேசுகிற நம்குலத்தின்
ஆச்சிகளின் தாலாட்டை அடுத்திருந்து கேட்டதனால்
பூச்சூடி முடிக்காமல் புடவையிடை கட்டாமல்
பாச்சூடி மருதீசர் பரம்பரைநான் பாடுகிறேன்
ஆத்தா மீனாட்சி அடியேனைத் தொட்டிலிட்டுக்
கோத்தமலர்த் தாலாட்டின் குரலின்னும் கேட்பதனால்
நாத்தடமாம் நரம்பாலே நல்லிதய வீணையிலே
பூத்த இசைமீட்டிப் பொன்மகனைப் பாடுகிறேன்
சீரங்கம் ஆடித் திருப்பாற் கடலாடி
வாரங்கா எனவேண்ட வந்துதித்த அப்பச்சி
ஈரங் காணாமல் என்விழியை வளர்த்ததனால்
ஓரம் ஒதுங்காமல் உள்வளவில் பாடுகிறேன்
பண்ணெடுத்து நானிங்கே பாட முயல்வேனேல்
கண்ணெடுத்து மருதீசர் காலெடுத்து நடந்திடுவார்
பொன்னெடுத்துத் தந்திடுவார் போதுமெனக் கெஞ்சிடுவார்
என்னடுத்து மகன்வருவான் இசையோடு பாடிடுவான்
என்மைந்தன் பாடுவதை எல்லாரும் உறங்காமல்
கண்விழித்துக் கேளுங்கள் கைதட்டிப் போற்றுங்கள்
பொன்னி நதிபோலப் பொங்கு கடல்போலப்
பொன்கொழித்தே எல்லோரும் புகழ்கொழித்து வாழியரோ
- பூச்சரம் அக்டோபர் ‘2007 இதழில் வெளிவந்தது

Monday, April 17, 2017

திருமூலர் - "திரு மந்திரம்"


இளமையை நீட்டிக்கும் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்... திருமூலரின் எளிய வழிமுறைகள்..!
"உணவே மருந்து" என்பது அந்தக் காலம். "மருந்தே உணவு" என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம் ? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.
திருமூலர், முதலில் உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணியிருந்தார். பின்பு இறைவன் குடியிருக்கும் கோயில் தான் உடம்பு என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றதாக அவரே கூறியிருக்கிறார். மருத்துவமுறை, பார்வதி தேவி பரமசிவன் மூலம் நந்தி தேவருக்கு சொல்லப்பெற்று, அவர் மூலம் திருமூலருக்கு சொல்லப்பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றது. சரி, நோய் மற்றும் மருத்துவமுறையைப் பற்றி திருமூலர் கூறுவதைக் காண்போம்...
* உடலில் உயிர் இருக்க வேண்டுமென்றால் புணர்ச்சியைக் குறைத்து உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். "அளவான உணவு" என்பது, உணவு அரை வயிறு, நீர் கால் வயிறு மற்றும் காற்று கால் வயிறு என்பதே அந்தக் கணக்கு .
* மாலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள கபம் அகலும். மதிய வேளையில் யோகம் பயின்றால் கொடிய வாதம் நோய் நீங்கும்.காலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள பித்தம் நீங்கும் நரை, திரை மாறும்.உடம்பில் வாதம் மிகுந்தால், எரிச்சல் உண்டாகும். கை, கால், விலாச் சந்து, இடுப்புச் சந்துகளில் மிகுதியான வலி ஏற்படும் என்று கூறியுள்ளார்.யோகத்தை முறையாகப் பயின்றால் வாதம் பித்தம் , சிலேத்துமம் சமப்பட்டு, உடல் இளமை பெறும் என்பதைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
*சுவாசம் வாய் வழியாக வந்தால் அது மரணத்திற்கான அறிகுறி. சுவாசம் ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். அதாவது , "பிராணனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துதல்" என்று பொருள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நெறிப்படுத்தி இயக்குவதன் மூலம் ஆயுளைக் கூட்டியும், குறைத்தும் மாற்றி நிறுத்த முடியும். மூச்சுப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் முகம் மலர்ந்திருக்கும், மனம் லேசாகும்,கண்களில் ஒளி இருக்கும்
பிராண இயக்கத்தைக் கொண்டே ஆயுள் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விரற்கடையளவு சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் அதற்கேற்ப குறையும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 62 ஆண்டுகள் வாழலாம்.
எட்டு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 50 ஆண்டுகள் வாழலாம்.
ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் முப்பதாகும்.
10 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் 28 ஆண்டுகள் ஆகும்.
15 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் இருபத்தைந்து.
*திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் திருமந்திரத்தில் கூறியுள்ளார். உதாரணமாக, உறவின் போது ஆணிடம் சுவாசம் வலப்பக்கம் இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடப்பக்கம் இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
"குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் "
தாய் வயிற்றில் மலம் மிகுந்தால், குழந்தை மந்தமாகப் பிறக்கும்.
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
அவர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
* மேலும் உடலிலுள்ள வாயுக்களில் ஒன்றான "தனஞ்சயன்" என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். "கூர்மன்" என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும் என்றும் கூறியுள்ளார்..
திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. இதை மனதில் நிறுத்தி "திரு மந்திரம்" போன்ற பொக்கிஷ நூல்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.

Sunday, April 16, 2017

பேழை பெட்டி ....!


No automatic alt text available.

பேழை பெட்டி ....!
இது பொருட்களை பேணி பாதுகாக்க பயன்படுத்தப்படுவதால் பேழை எனப்படுகிறது இதனை தமது இனப் பண்பை கலாசாரத்தை குடும்ப உறவுகள் கட்டுமானத்தை பேணி பாதுகாக்க நகரத்தார் இனம் பயன் படுத்துகிற விதம் மிக அழகானது
ஒரு வளவுக்குள் இருக்கும் ஐயாக்கள் வீட்டினர் தம் முன்னோர்களின் நினைவான பொருட்களை இதனுள் வைத்து பாதுகாப்பார் ஆண்டுக்கு ஒருமுறை கூடி முன்னோர்கள் நினைவாக புதிய துணிமணிகள் எடுத்து உணவு வகைகள் பல செய்து பேழைப் பொருட்களை வெளியிலெடுத்து அதனுடன் வைத்து படைத்து வணங்குவர்
வணங்கியபின் புதிதாக எடுத்த துணிமணிகள் ஏற்கனவே உள்ள நினவுப்பொருட்கள் ஆகியவற்றை பேழையில் வைத்து கட்டி சுவாமி வீட்டினுள் வைத்துவிடுவர் இது மீண்டும் அனைவரும் ஒன்றுகூடிதான் பிரிக்க வேண்டும் என்பது மரபு
இத்தகைய படைப்பு பேழைகள் வளவு ,ஊர் ,சில ஊர்கள் சேர்ந்து என இருக்கின்றன குலத்தில் தோன்றிய கன்னி பெண்கள் வாழ்வரசிகள் பேர்பெற்றமூத்தோர் குலதெய்வங்களுக்கும் பொதுவில் படைப்பு பேழைகள் இருக்கின்றன
எத்தகைய பிணக்குகள் உறவுகளுக்குள் இருந்தாலும் ஒன்று கூடியே பிரிக்க வேண்டும் என்பது மரபாக இருப்பதால் படைக்க விரும்புவோர் பிணக்கு மறந்து கூடி படைப்பர் அச்சமயத்தில் பிணக்கு மாறி இணக்கம் எற்பட வாய்ப்பு பிறக்கிறது குடும்பங்கள் ஒன்று சேர்கிறது
இப்பொழுது வளவு பேழைகள் பேணப்படாமல் பெரும்பாலும் ஆற்றில் விடப்பட்டுவிட்டது ஆற்றில் விட்டது பேழை மட்டுமல்ல வளவு ஒற்றுமைக்குறிய வாய்ப்பையும்தான் ஊர்,பலஊர் படைப்பு பேழைகள் மட்டும் பேணப்படுகின்றன
உறைவை கட்டிவைத்த வளவு பேழைகளும் மீண்டும் கட்டப்படட்டும் வளவுகளும் இடிபடாமல் புதிப்பிகப்படட்டும் மரபு முன்னோர் அருளால் காக்கப்படும்