நகரத்தார் இனத்தில் நல்லது கெட்டது சம்பந்தமான விசேட நாட்களில் கத்திரிக்காய் குழம்பு வாழைக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்வார்கள். பொங்கல் போன்ற பண்டிகைகளில் கட்டாயம் கருணைக் கிழங்கு குழம்பு வைப்பார்கள். அதாவது திருமணமான பெண் முதல்வழி வரும்போது, காய்ச்சி ஊற்றும் போது, மகப்பேறுக்கு மகளை அழைத்துக் கொள்ளும் போது, மருமகளை வேறு வைக்கும் போது, மகர்நோன்பு (மானம்பு) புதுமனை புகும்போது, பேரப்பிள்ளைகளை வீட்டுக்கு முதன் முதலாகக் கூட்டிக் கொள்ளும் போது எனப் பல்வேறு விசேடங்களில் கத்திரிக்காயும் வாழைக்காயும் பிரதானமாய் இடம் பெறும்.
கத்திரிக்காய் கெட்டியாக இருந்தாலும் சமைக்கும் போது குழைந்து போய் உப்பு புளி மிளகாய் போன்றவற்றை ஈர்த்துக் கொள்ளும்.
வாழைக்காய் கெட்டியாக இருந்தபடியே உப்பு, மஞ்சள் தூள் போன்ற கலவைகளை ஈர்த்துக் கொள்ளும்.
கருணைக்கிழங்கு தனது கெட்டிமைத்தன்மையிலிருந்து நன்கு மாவு போல் மசிந்து போகும்.
கூட்டு வாழ்க்கையில் கணவன் மனைவி எப்படி அனுசரித்து (சூழலுக் கேற்றவாறு குழைந்து கொடுத்தோ, நிலையில் திரியாமல் உறுதியுடன் இருந்தோ அல்லது நன்கு மசிந்து கொடுத்தோ) நல்லவிதமாய் வாழ வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துதற்காகவே நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். மேலும் இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த சோகையை நீக்கி, கொழுப்பைக் குறைத்து, தேவையான சத்துகளைத் தரவல்லது இந்தக் காய்கறிகள் என்பதால் நுண்மான் நுழைபுலத்துடன் இதை பழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவைகளின் மருத்துவ குணங்கள் பற்றி கீழே விவரித்துள்ளேன்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கத்திரிக்காய்
கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டுச் சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவக் குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.
கத்திரிக்காய் வலியைப் போக்கும் தன்மையுடையது, காய்ச்சலைப் போக்கக் கூடியது, சோர்வைப் போக்கக் கூடியது, வீக்கத்தைத் தணிக்கக் கூடியது, கொழுப்பைக் குறைக்கக் கூடியது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது, இரத்த வட்ட அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது, கண்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.
மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு இரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.
கத்தரிக்காயின் தோலில் உள்ள " ஆன்த்தோ சயனின்'' என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி "ஆன்தோ சையனின்'' புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டுத் தடுக்க வல்லது.
கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிறைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.
வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
* கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.
* கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்குப் பலத்தைத் தருவதாக அமைகிறது.
* கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் இரத்தக் கசிவு குணமாகும்.
* கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது.
* கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.
* கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.
* கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.
* கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும்.
* கத்தரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்.
* கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் துணை செய்யும்.
* கத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி விடுகின்றது.
* கத்தரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் இரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது.
* கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் இரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியயேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. இரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது.
* கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.
* கத்தரிக்காய் சீரண உறுப்புகளுக்குப் பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக அமைகிறது.
* கத்தரிக்காய் ஓர் நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது.
* கத்தரிக்காயில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.
* கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
* கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்துத் தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது.
இரத்த விருத்தி தரும் வாழைக்காய்
வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
வாழைக்காயில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி & இ. உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இரத்தசோகையைத் தடுக்க உதவும்.
வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாகச் சாப்பிட நோய் கட்டுப்படும்
வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும்.
பச்சை வாழைக்காயைச் சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
நாம் பொதுவாக வாழைக்காயைச் சமைக்கும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சமைப்போம். அந்தத் தோலை குப்பையில் அல்லது கால்நடைகளுக்கு போட்டுவிடுவோம். அதைச் சாப்பிடக்கூடிய கால்நடைகள் நன்றாக உழைக்கின்றன. தோலில் இருக்கும் துவர்ப்புத் தன்மை நமக்கு நன்மையையே அளிக்கும். துவர்ப்புச் சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது,
கருணைக்கிழங்கு
கருணைக்கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. இது மூலநோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனைச் சமைத்துக் கொடுக்கலாம்.
குடலைச் சுத்தப்படுத்தும் கருணை மனம் கொண்டது கருணைக்கிழங்கு. அதனால்தான் அதற்குக் கருணைக்கிழங்கு என்று பெயர்.
முன்னோர்கள் மிக மிக அறிவுத்திறம் கொண்டவர்கள். நல்ல சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் மிக்கவர்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டு இன்புறலாம்.